தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 18) திமுக கொறடா எ.வ வேலு, “காலை உணவு திட்டத்தை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன? புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வையுங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆனால் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றியது ஏன்?” என கேள்வி எழுப்பினார். எ.வ வேலுவின் பேச்சுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “கலைஞரை நாங்கள் மதிக்கிறோம். கலைஞர் குறித்து மரியாதை இல்லாமல் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட தாய் உள்ளம் கொண்ட முதலமைச்சர் இங்கே அமர்ந்துள்ளார். மைக், சேர், டேபிள் எல்லாம் செய்தது நாங்கள் என்று சொல்கிறீர்கள். அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் செய்த திட்டங்கள்தான்.
திட்டங்களுக்கு பெயர் மாற்றம் என்பது காலகாலமாக நடைபெற்று வருகிறது. அம்மாவின் பசுமை இல்லம், கலைஞர் கனவு இல்லமாக மாறியது. அம்மா மினி கிளினிக் முதல்வர் மினி கிளினிக்காக மாறியது. அதுபோல, காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் இந்த உலகத்திலேயே கிடையாது” என்றார்.

Comments are closed.