வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…
பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவு..
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992 ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். இந்த வழக்கில் இன்று ( 29.09.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, சிறைத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதோடு குற்றவாளிகளிடம் ரூ.5 லட்சம் வசூலித்து அரசின் ரூ.5 லட்சம் சேர்த்து தலா ரூ.10 லட்சம் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.