திருச்சி புத்தூர் நால் ரோடு முதல் வயலூர் வரை பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. சுமார் 8 மாதத்துக்கு மேலாக இந்த பணிகள் மந்த கதியில் நடப்பதாக பொதுமக்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தனர். இதனால், சாலையில் புழுதிகள் அதிகம் பறந்து, வாகன ஓட்டுநர்கள் மீது விழுந்து வருகிறது. மேலும், சாலை குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து வருகின்றனர். கடந்த வாரம் இரட்டை வாய்க்கால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இன்று ( 29.09.2023 ) உக்கடம் அரியமங்கலத்தைச் சேர்ந்த சிவானந்தம் (40) குண்டும்- குழியுமான சாலையில் இருசக்கர வாகனத்தை இயக்கியபோது மண் சறுக்கி லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்புகள், வியாபார சங்கங்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையா்கள் ராஜு, நிவேதா, மாநகராட்சி அதிகாரிகள், மாநில தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.