Rock Fort Times
Online News

திருச்சி என்ஐடி தொழில்நுட்ப உதவியாளர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு…!

திருச்சி, துவாக்குடி வடக்குமலை வஉசி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (59). இவர் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக கோவிந்தராஜன் என்பவரும் வேலை பார்க்கிறார். இக்கல்லூரியின் ஆசிரியர் அல்லாத ஊழியர் சங்கத்தின் தலைவராக கோவிந்தராஜனும், பொறுப்பு தலைவராக விஸ்வநாதனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி ஆசிரியர் அல்லாத ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்ததாகவும், அதில் தலைவரை கையெழுத்து போட விடாமல் நிறுத்தி வைத்து, பொறுப்பு தலைவரான விஸ்வநாதனைக் கையெழுத்திடுமாறு கூறியதாகவும் அதன் அடிப்படையில் விஸ்வநாதன் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5ம் தேதி கோவிந்தராஜன் கூட்டிய செயற்குழு கூட்டத்தின் 4 வது தீர்மானத்தில் கடந்த மார்ச் மாதம் செயற்குழு கூட்டத்தில் விஸ்வநாதன் கையெழுத்து இட்டது அருவருப்பாக இருப்பதாக கூறிக் கண்டிப்பதுடன் அவரை உயர்நிலை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இமெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் கோவிந்தராஜன் தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஸ்வநாதன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பது கோவிந்தராஜனுக்கு தெரியும் என்றும், அதனால் தான் அவரது கையெழுத்தை அருவருப்பாக உள்ளது என கூறியுள்ளாராம். இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் 9, மே 1 ஆம் தேதிகளில் வக்கீல் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், நோட்டீசை பெற்றுக் கொண்ட கோவிந்தராஜன் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லையாம். இந்நிலையில் அவர் மீது துவாக்குடி காவல் நிலையத்தில் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவிந்தராஜன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்