திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் நள்ளிரவில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- மர்ம கும்பலுக்கு வலை…!( வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகரில் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சிந்தாமணி அண்ணா சிலை பகுதி ஆகும். இப்பகுதியில் அடிக்கடி இளைஞர்கள் கஞ்சா போதையிலும், மது போதையிலும் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு (17-01-2025) முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வெட்டப்பட்ட வாலிபர் திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்தது. அவர் தனது நண்பர்கள் லோகேஷ், சஞ்சய், ராம் ஆகியோருடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற வேடுபறி நிகழ்ச்சியை காண வந்ததும், ஸ்ரீரங்கத்திலிருந்து சிந்தாமணி அண்ணா சிலை பகுதிக்கு நால்வரும் வந்தபோது மர்ம கும்பல் அவர்களை தாக்க முற்பட்டனர். இதில், முத்துக்குமார் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டதால் வெட்டப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முத்துக்குமாரிடம் விசாரித்த போது, முன்விரோதம் காரணமாக தன்னை வெட்டியதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து முத்துக்குமாரை வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.