Rock Fort Times
Online News

தொண்டர்களும் விரும்பவில்லை, மக்களும் விரும்பவில்லை, அதிமுக-பாஜக கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது- துரை வைகோ எம்பி…!

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். திருச்சி – எர்ணாகுளம், திருச்சி – பெங்களூர் திருச்சி – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கிடையே ரயில்கள் இயக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . இதுகுறித்து ரயில்வே அமைச்சரிடம் பேசியுள்ளேன். முதல் கட்டமாக திருச்சியில் இருந்து திருப்பதிக்கு ரயில் சேவை கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.இதுதவிர திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க முயற்சி செய்வேன். ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதியாக இருந்தாலும், துணை ஜனாதிபதியாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். மாறாக அந்த தீர்ப்பை விமர்சிப்பது தவறு. மகாராஷ்டிராவில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக அம்மாநில மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் மகாராஷ்டிராவில் இந்தி திணிக்கப்படாது மராட்டிய மொழி தான் கட்டாயம் என மாநில பாஜக முதலமைச்சர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மதிமுகவில் நிலவிய சில பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். திமுக கூட்டணியில் அதிருப்தி நிலவுவது போல வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசவில்லை அவர் அப்படி பேசவும் மாட்டார். அதிமுக- பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.அதிமுகவிற்கும் நல்லதல்ல. இந்த கூட்டணியை தொண்டர்களும், மக்களும் விரும்பவில்லை. எந்த பின்னணியில் அதிமுக- பாஜக கூட்டணி உருவானது என்பது அனைவருக்கும் தெரியும். விருப்பம் இல்லாமல் தான் பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஒவ்வாத கூட்டணி ஒரு போதும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி சேரன், மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்