தூத்துக்குடி மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎஸ் ஆவது தனது லட்சியம் என பதிவிட்டுள்ளார். மேலும், தான் காவல்துறையில் சப்- இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருவதாக பலரிடம் கூறி வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மேற்கு காமராஜர் நகர் பகுதியில் தன்னுடன் பயின்ற தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்ற அவர், தோழியின் தாயார் கிருஷ்ணவேணி என்பவரிடம், தான் சென்னையில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், என்கவுண்டர் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடிக்கு வந்துள்ளதாகவும், இரண்டு நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் போலீஸ் என்று கூறியதால், கிருஷ்ணவேணி அனுமதி அளித்துள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்த கங்காதேவி, வீட்டில் இருந்த தாலி மற்றும் ரூ.2,000 ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளார். இதேபோல, மற்றொரு தோழியான தாய் நகர் சுனாமி காலனி பகுதியில் வசித்து வரும் வளர்மதி என்பவரது வீட்டிற்கு சென்ற கங்காதேவி, அங்கும் தான் போலீஸ் என்று கூறி 2 நாட்கள் தங்கி வீட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுதொடர்பாக தாளமுத்து காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி மற்றும் வளர்மதி தனித்தனியாக புகார் அளித்தனர். புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து கங்காதேவியை தேடி வந்தனர். இதனிடையே மேட்டுப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கங்காதேவியை வளர்மதியும் அவரது கணவரும் பிடித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், வேறு யாரிடமாவது இதே போன்ற மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.