திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியில் 5 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், கீழ்வீட்டில் சுமார் 5 அடி நீள பாம்பு ஒன்று நுழைந்தது. வீட்டிலிருந்த ராஜேஸ்வரி என்பவர் அந்த பாம்பைக் கண்டு கூச்சலிட்டார். பின்னர் அந்த பாம்பு நுழைவாயில் அருகேயிருந்த மாடிப்படி வழியாக ஏறி அங்குள்ள குளியலறை பகுதியில் பதுங்கிக்கொண்டது. இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர்கள் சோமரசம்பேட்டை பகுதிக்கு சென்றிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் பயத்துடன் காத்திருந்தனர். ஒரு வழியாக தீயணைப்பு வீரர்கள் வந்ததும் பாம்பை தேடினர். எங்கு தேடியும் பாம்பு கிடைக்கவில்லை. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீயணைப்பு வீரர்கள் பார்த்தபோது பெட்ரோல் டேங்க் பகுதியில் அந்த பாம்பு பதுங்கி இருந்தது. அதை லாவகமாக பிடித்த தீயணைப்பு படை வீரர்கள் பின்னர் பாதுகாப்பாக பைக்குள் வைத்து வனப்பகுதியில் விடஎடுத்துச் சென்றனர். அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு சுமார் 3 மணி நேரம் போக்கு காட்டியது. வியாழக்கிழமை ஒருநாளில் மட்டும் சோமரசம்பேட்டை, கருமண்டபம், தென்னூர், விமான நிலையம் என 4 பகுதிகளில் மொத்தம் 4 பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.