Rock Fort Times
Online News

பொறுத்து பொறுத்து பார்த்த விவசாயி பொங்கி எழுந்தார்: காய்கறிகளை தொடர்ந்து திருடியவர் மீது நாட்டு துப்பாக்கியால் சுட்டார்…!

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை வேளாண் பண்ணை பகுதியை சேர்ந்தவர் சவேரியார் (70). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் மாமரங்களைப் பராமரித்து வருவதோடு, காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளார்.  இவரது தோட்டத்தில் யாரும் இல்லாத போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் வெள்ளையன் (18) புகுந்து காய்கறிகளைத் திருடிச் சென்றுள்ளார்.  இதனை கவனித்த சவேரியார், வெள்ளையனை பலமுறை எச்சரித்துள்ளார். எனினும், அவர் காய்கறிகளை திருடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  வழக்கம்போல தோட்டத்துக்குள் புகுந்து வெள்ளையன் காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த விவசாயி தனது நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளையனை நோக்கி சுட்டார்.  இதில் வெள்ளையனின் கை, கழுத்து ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது.  இதையடுத்து அங்கிருந்து சவேரியார் தப்பிச் சென்றார். படுகாயமடைந்த வெள்ளையனை அப்பகுதியினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள சவேரியாரைத் தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்