மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்க துரை ஆகிய மூன்று பேரும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அளவில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தட்டிக்கேட்டுள்ளான். அப்போது மூன்று பேரும் சிறுவனை தாக்கியுள்ளனர். சிறுவனை தாக்கியது ஏன் என்று கேட்பதற்காக ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் சென்று ராஜ்குமார் தரப்பினரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை ஊர்க்காரர்கள் தடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து நள்ளிரவு சாராய வியாபாரிகள் தரப்பினர் கல்லூரி மாணவர் ஹரிசக்தி மற்றும் ஹரிஷை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இருவர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர் மற்றும் இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சாராய விற்பனையை தட்டி கேட்ட இரண்டு வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.