திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் மகன் ஆனந்த்( வயது 24). கூலி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கிய ஆனந்த், ரயில்வே மேம்பாலம் பகுதியில் மது அருந்திவிட்டு தண்டவாளத்தில் நின்று கொண்டு கூச்சல் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்ற ஆனந்த் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது அண்ணன் கார்த்திக் படுகாயம் அடைந்தார்.
இதனை அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் மற்றும் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.