முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் முதல்முறையாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் உள்பட 35 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தநிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை(ஜூன் 5) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் சிலவற்றிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரை எப்போது கூட்டுவது? பட்ஜெட் தாக்கல் செய்வது, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய சிறப்பம்சங்கள், புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய சிறப்பம்சங்கள் உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும், டாஸ்மாக் கடைகள், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாத நிலையில் அது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.