Rock Fort Times
Online News

திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கினார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்..!

திருச்சி திருவானைக் கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மார்கழி மாத சீர்வரிசை வழங்கப்பட்டது. சென்ற நூற்றாண்டு துவக்கத்தில் நின்று போன இவ்வழக்கத்திற்கு தற்போது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு நேற்று இரவு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதேபோல அகிலாண்டேஸ்வரியும்,ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு அக்கோவிலில் மார்கழி முதல்நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன் கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டுவர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன. இதையடுத்து இன்று மார்கழி மாதப்பிறப்பானதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேலதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன்,
கோவில் கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் திருவானைக்காவல் கோவிலுக்கு இரவு எடுத்து வந்தனர்.
திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன் வைத்து சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். முதல் பூஜையின்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு 16 வகை உபசாரங்களுடன் மகா தீபாராதனை நடைபெறும். இந்த சீர்வரிசை பொருட்கள் கொடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்