இந்திய நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகிற 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியா முழுவதும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,650 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 45 சதவீதம் போதைப்பொருட்கள் எனவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையை விட இது அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்களவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . இதுவரை ரூ.4,650 கோடிக்கு மேல் அமலாக்கத்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனையில் ரூ.4.43 கோடி அளவில் மதுபானங்களும், ரூ.78.75 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்களும், ரூ.31 கோடி மதிப்பிலான இலவச பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரூ.53 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.