Rock Fort Times
Online News

அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா?- செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி…!

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோதமான பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. இதனால், அமைச்சர் பதவியை இழந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெரிட் அடிப்படையில் நாங்கள் ஜாமீன் வழங்கவில்லை. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது. ஜாமீன் வேண்டுமா?, அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து ஏப்ரல் 28க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று(26-04-2025) தாக்கல் செய்தார். ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விடுவாரோ என்றும், அவர் ராஜினாமா செய்து விட்டால் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா மீது ஏப்ரல் 29ம் தேதி விவாதம் நடைபெற்றால் செந்தில் பாலாஜியால் பதில் அளிக்க முடியாது என்பதால்தான் மாற்று ஏற்பாடாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வருகிற திங்கட்கிழமைக்குள் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்