சென்னையில் இன்று அதிகாலை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் காக்காதோப்பு என்கிற பகுதியில் பிறந்து வளர்ந்ததால் சக ரவுடிகளால் காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டார். பிரபல ரவுடியாக வலம் வந்த இவர், 2009 ம் ஆண்டு ரவுடி சதீஷ் என்பவரை கொலை செய்தார். 2011ம் ஆண்டு வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி மனைவியின் கண் முன்னே பில்லா சுரேஷ் என்பவரை காக்கா தோப்பு பாலாஜி தரப்பு கொலை செய்தனர். அடுத்த சில மணி நேரங்களில் ரவுடி விஜி (எ) விஜய குமாரை கொலை செய்தனர். மேலும், ஆட்கடத்தல், கட்டபஞ்சாயத்து என 40 க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி சென்னை மோஸ்ட் வாண்டட் ரவுடியாக மாறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்ட இவரை போலீசார் தேடி வந்த நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் காக்கா தோப்பு பாலாஜி இன்று அதிகாலை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். பின்னர் அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், காக்கா தோப்பு பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றதிலிருந்து சென்னையில் நடைபெறும் 2-வது என்கவுண்டர் இதுவாகும்.

Comments are closed.