கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே லாயம் விளக்கு பகுதியில் சகாய நகர் என்ற இடத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகிலேயே டீக்கடை ஒன்றும், பிற கடைகளும் அமைந்துள்ளது. இந்தநிலையில் இன்று(18-06-2024)
காலை டீ குடிப்பதற்காக வாடிக்கையாளர்கள் வந்தபோது, ராஜீவ் காந்தி சிலை கீழே விழுந்து சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரசார் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின்பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வழியாக நள்ளிரவு வந்த ஏதோ ஒரு வாகனம் சிலை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று இருந்தது தெரிய வந்தது.
இருப்பினும் விபத்து காரணமாக சிலை பெயர்ந்து கீழே விழுந்ததா அல்லது மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததன்பேரில் காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments are closed.