தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி எம்பி தமிழகம் வந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்னும் பிரச்சாரம் செய்யவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் அவரால் வர இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி நாளை(ஏப்.18) தமிழகம் வருகிறார். அப்போது அவர்
திருச்சி மாவட்டம், துறையூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்தை ஆதரித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் மூலம் அவர் துறையூர் வருவதாக தெரிகிறது. இதற்காக துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் பயணம் செய்து துறையூர்- பெரம்பலூர் பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திடலில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராகுல்காந்தி
பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இடத்தை திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார். அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.