திருச்சியில் அனுமதியின்றி செயல்பட்ட இரவு நேர பிரியாணி கடைகள் அகற்றம்
மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நடவடிக்கை
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கன்டோன்மென்ட் பகுதியில் ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய பஸ் நிலையம், வில்லியம் சாலை, எஸ்பிஐ வங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோர உணவு கடைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் இவர்கள் பெட்டி அமைத்து, மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்தி கடைகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த பல மாதங்களுக்கு முன் திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தியும், தள்ளுவண்டிகளை நிரந்தரமாக நிறுத்தியும், உரிய அனுமதி இன்றி பலர் பிரியாணியை விற்பனை செய்ய தொடங்கினர். இந்த பிரியாணி கடைகளால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது பற்றி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் புகார் செய்தபோதும் போக்குவரத்து போலீசார் அந்த வாகனங்களை கண்டு கொள்ளவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மத்திய பஸ் நிலையம், ரயில் நிலைய பகுதிகளில் அனுமதி இன்றி இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படும் பிரியாணி கடைகளை அகற்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவற்றை அப்புறப்படுத்த மேயர் அன்பழகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, நேற்றிரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதிகளில் வாகனங்களில் இயங்கி வந்த பிரியாணி கடைகள், நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளு வண்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டது. குறிப்பாக பகலில் வியாபாரம் முடிந்து இரவில் நிறுத்தி சென்ற தள்ளு வண்டிகளும் மாநகராட்சி லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோல் கண்ட்ரோல்மென்ட், வில்லியம் சாலையிலும் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.