திருச்சியில் மூடி வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையை திறக்க கோரி இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் மனு…!
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சிலை திறக்கப்படாமல் கடந்த 13 ஆண்டுகளாக மூடியே வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திறக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை சிலை திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரசிகர் தொடர்ந்த வழக்கில், தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதனை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆகவே, கோர்ட் உத்தரவுபடி சிவாஜி சிலையை அகற்றி வேறு ஒரு இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் ரெக்ஸ், வக்கீல் சரவணன், கோவிந்தராஜன்,ஜெய நிர்மலா ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.