சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய நோய் சிறப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நாளை (ஜூன் 21) இதய அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்திற்குச் செல்லக்கூடிய 3 ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு பரிந்துரைத்தது. அதற்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு செந்தில் பாலாஜியின் உடல்நிலை தயாராகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என கூறினாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.