முதுகுளத்தூர் அருகே எஸ்பி கோட்டை கிராமத்தில் மாசி களரி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, கரகம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன்…!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த எஸ்பி கோட்டை கிராமத்தில் 12ம் ஆண்டு மாசிக்களரி திருவிழா நடைபெற்றது. எஸ்பி கோட்டை கிராமத்தில் அய்யனார், வாழவந்த அம்மன், கைலாசநாதர், சூந்தாளமூர்த்தி, வீரமாகாளியம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டு அருள் பாலித்து வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 12ம் ஆண்டு மாசிக் களரி திருவிழா பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் பேச்சியம்மன் கோவிலில் இருந்து வீரமாகாளியம்மன் கோவில் வரை அக்னி சட்டி, பால்குடம், கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று பூக்குழி இறங்கினர். அதன் பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வணங்கினர். கிடாவெட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்த பிரமுகர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Comments are closed.