Rock Fort Times
Online News

தமிழக பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மீது பாய்ந்தது குண்டாஸ்

தமிழக பாஜகவில் ரவுடிகள், கொலை குற்றவாளிகள் அதிக அளவில் சேர்க்க சேர்க்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரபல ரவுடி சத்யா. இவரின் ஒரிஜினல் பெயர் சத்யராஜ்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தான் இவரது சொந்த ஊர். இவர் மேல் பல கொலை மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இந்நிலையில், கோவையில் ஒரு வழக்கில் சத்யாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஆஜராகாமல் ரவுடி சத்யா தலைமறைவாக இருந்து வந்தார்.  இந்த சூழ்நிலையில், மாமல்லபுரம் அருகே பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது .  இதில் கலந்துகொண்ட பிரபல ரவுடி சத்யாவை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரின் படியிலிருந்து தப்பிக்க முயன்ற சத்யாவை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட ரவுடி சத்யா, நீதிமன்ற உத்தரவையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சத்யாவுக்கு கள்ளத் துப்பாக்கி வழங்கியதாக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரி சுதாகர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய் பிரனீத், மாவட்ட கலெக்டருக்கு அலெக்ஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர்,சுதாகர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்