நீலகிரி மாவட்டம் ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மா மற்றும் போலீசார் ஊட்டி பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 200 கிராம் கஞ்சா இருந்தது. இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் வெல்லார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேரந்த சவுந்தரராஜன் (வயது 24) என்பதும், கடந்த 2000-ஆம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. தற்போது 14-வது பட்டாலியன் படைப்பிரிவில் கோவை மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததும், கடந்த சில மாதங்களாக தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து நீலகிரியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவர் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார்?, அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை வாங்கி விற்க முயன்ற போலீஸ்காரர் ஒருவரே கைது செய்யப்பட்ட சம்பவம் சக போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.