திருச்சி சுப்பிரமணியபுரம் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், கொள்ளை, கொலை குற்றவாளிகள் என 1500- க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சிறைக் காவலர்கள் கண்காணித்து வருகிறார்கள். அதேபோன்று சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் மதுரை மாவட்டம், திடீர் நகரை சேர்ந்த வட்டசூர்யா (வயது 27) என்பவர் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். டிசம்பர் 21-ந் தேதி திருச்சி சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட்ட சூர்யாவிடம் இருந்து 12 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உயர் பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள் கைதிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? என சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக வட்ட சூர்யாவிடம் விசாரணை நடத்திய போது, சிறையில் உள்ள வார்டன் எழில்ராஜ் தனக்கு கஞ்சா வழங்கியதாக கூறினார். இது தொடர்பாக சிறை அலுவலர் சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார், கைதி வட்ட சூர்யா மற்றும் சிறை வார்டன் எழில்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து சிறை வார்டன் எழில்ராஜை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.