Rock Fort Times
Online News

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்பு..

திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாநில செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் இன்று ( 30.09.2023 ) நடைபெற்றது. இந்த அறிமுக கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்,

கலைஞர் தொழிலாளர்களின் நண்பனாகவும் ,நேசனாகவும் இருந்தார். அவர் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்ததால் கை ரிக் ஷாவை ஒழித்தார். போக்குவரத்து துறையை அரசுடமையாக்கியது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தவா் கலைஞர். அவரது அந்த நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்தனர். அந்த வகையில் அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கான அணியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தந்துள்ளார். அமைப்பு சார்ந்துள்ள ஓட்டுனர்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் அனைத்தும் விரைவில் அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கும் கிடைக்கும். விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நீதிமன்ற தலையீடு இல்லாமல் என்ன பாதுகாப்பு வழங்க முடியுமோ அதை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். டிராக்டர், டாடா ஏசி உள்ளிட்ட அனைத்து ஓட்டுனர்களையும் அமைப்புசாரா ஓட்டுனர் அணியில் இணைக்க வேண்டும். இந்த அணிக்கு என்ன உதவிகள் செய்ய முடியுமோ போக்குவரத்து துறை அமைச்சராக அதை செய்து தருவேன் என்றார். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்