Rock Fort Times
Online News

திருச்சியில் மூடப்பட்டுள்ள சிவாஜி சிலையை திறக்க சட்டமன்றத்தில் போராடி அனுமதி பெற்றுத்தந்த இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ…!- அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்எல்ஏக்கு பாராட்டுக்கள் குவிகிறது!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், தமிழ் திரை உலகின் முடிசூடா மன்னனாகவும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சி பாலக்கரை பகுதியில் ஒரு வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் கே.என்.நேருவும் நிதியுதவி அளித்துள்ளார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் திலகம் சிவாஜி சிலை சாக்கு பையில் சுற்றப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சிவாஜி கணேசன் ரசிகர்கள் மற்றும் திருச்சி மக்கள் கடும் வேதனையில் இருக்கின்றனர். ஆகவே, பாலக்கரை பகுதியில் சிவாஜிகணேசன் சிலையை திறக்க முடியாவிட்டாலும் மாற்று ஏற்பாடாக பாலக்கரை ரவுண்டானா கால்நடை மருத்துவ மனை அருகிலோ, அல்லது சத்திரம் பேருந்து நிலைய காமராஜர் சிலை பின்புறத்திலோ, சோனா மீனா தியேட்டர் அருகிலோ சிவாஜி கணேசன் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதோடு, தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்கின்ற சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வகைகளில் முயற்சி எடுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக சிலையை திறக்க முடியவில்லை. இருந்தாலும் உறுப்பினர் கோரிக்கைக்கு மதிப்பளித்து மாநகராட்சியின் மறு அனுமதி பெற்று மீண்டும் வேறு இடத்தில் சிவாஜி கணேசன் சிலையை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல தமிழில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதேபோல அமைச்சர் கே.என். நேருவும் இந்த ஆண்டுக்குள் சிவாஜி கணேசன் சிலையை வேறு இடத்தில் அமைத்து திறக்க முழு முயற்சி எடுப்பதாக தெரிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் சீகன்பாலுக்கு மணிமண்டபம் கட்ட முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் நடந்து கொண்டிருக்கும் பணியில் தாமதம் நிலவுகிறது. அப்பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர்கள், சீகன்பால்க் மணிமண்டபம் அமைக்க 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர்.இந்நிலையில் சிவாஜி சிலையை திறக்க சட்டமன்றத்தில் போராடி அனுமதி பெற்று தந்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அதனை நிறைவேற்றி தருவதாக தெரிவித்த அமைச்சர் கே.என்.நேருவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்