சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று(மே.28) நடைபெற்ற பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்றால், ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும். ஊழல் செய்தால் அடுத்த விநாடியே எங்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எக்காரணத்திற்கும் நாங்கள் ஊழல் செய்ய வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் நோக்கம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளப் போகிறோம். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தற்போது கட்சியில் இணைந்து வருகின்றனர். தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால், அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மாற்றுக் கட்சியில் இருந்து வந்தாலும் தவெகவில் உரிய மரியாதை வழங்கப்படும்” என்று அமைச்சர் ஆனந்த் பேசினார்.

Comments are closed.