நாடாளுமன்ற மக்களவையின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16ஆம் தேதி முடிவடைகிறது.18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைஒட்டி தேசிய, மாநில கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று(22-01-2024) வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3.14 கோடி பெண்கள். 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோளிங்கநல்லூர் முதலிடத்திலும், கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி இரண்டாவது இடத்திலும் உள்ளன. சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60, 419 வாக்காளர்களும், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4,62,612 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.