திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனைக்காக எடுத்து செல்லப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் உமாசங்கரி உள்ளிட்டோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மொய்தீன்கான் என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் 1,150 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் மறைத்து கடத்திச் சென்றது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், மொய்தீன்கானை கைது செய்தனர்.

Comments are closed.