Rock Fort Times
Online News

திருச்சி அருகே கார் மோதி தாய் – மகன் பலியான வழக்கில் திமுக தொழிற்சங்க நிர்வாகி கைது…!

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில். திமுக பிரமுகரான இவர், அந்த பகுதியில் சவுக்கு மற்றும் விறகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பர்வீன்பானு (33). இவர்களது மகன் அப்சல் அகமது (11), மகள் அல்பினா பேகம் (13). கடந்த 16-ம் தேதி இரவு பக்ரீத் பண்டிகைக்கு துணி வாங்குவதற்காக பர்வீன்பானு தனது இரு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். சக்திநகர் பிரிவு ரோடு அருகில் அவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, திருச்சியில் இருந்து பெட்டவாய்த்தலை வழியாக சென்ற கார் மோதியதில், பர்வீன் பானு, அப்சல்அகமது ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக அல்பினா பேகம் உயிர் தப்பினார். காரை ஓட்டி வந்தவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக கடந்த 17-ம் தேதி ஒருவர் சரணடைய வந்தார். அப்போது கார் ஓட்டி வந்தது இவர் இல்லை என்றும், ஆளை மாற்றப் பார்க்கின்றனர் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் உண்மை குற்றவாளியை கைது செய்வதாக உறுதியளித்தனர். இந்நிலையில், திருச்சி எச்ஏபிபி-ல் அலுவலராக பணியாற்றி வரும் செந்தில்குமார் (42) என்பவரை பெட்டவாய்த்தலை போலீஸார் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், திமுகவின் தொமுச செயலாளராகவும் உள்ளார். விபத்து நடந்த அன்று தன்னுடன் பணியாற்றும் ஒருவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக செந்தில்குமார், மதன், சண்முகவேல் ஆகிய மூவரும் சென்றுள்ளனர். விபத்து நடந்ததும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு மூவரும் தப்பியோடி விட்டனர். முதலில் விபத்து ஏற்படுத்தியது தான் தான் என்பதை செந்தில்குமார் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் போலீஸார் பல ஆதராங்களை முன் வைத்த பின்னரே, விபத்து நடந்த அன்று தான் தான் காரை ஓட்டி வந்தேன் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்