Rock Fort Times
Online News

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? சட்டப்பேரவையில் காரசார மோதல்…!

கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்றது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்டமாக போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் சொன்னபடியே தவெக ஆட்சி அமைந்ததும் நேற்றைய கூட்டத் தொடரில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கை விடப்பட்டதாகவும், புதிய இடம் தேர்வு செய்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய (25-08-2026) கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சனை மீண்டும் வெடித்தது. அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் பேசுகையில், பரந்தூரில் 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 48 % மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அதிகமாக கதறுவோர் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்கா கவும், கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்களும் தான் என தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ஜி ஸ்கோயர் மாப்பிள்ளை என சொன்னால் என்ன தவறு உள்ளது.? என்றார். இதற்கு பதில் அளித்த திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக விமான நிலையம் என்று சொன்னால் எந்த லாட்டரி மாப்பிள்ளைக்காக புதிய விமான நிலையம் என நான் கேட்கவா.? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பேசினார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே சபாநாயகர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்