Rock Fort Times
Online News

அக்டோபர் 27-ல் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.  விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடைபெற காவல்துறை அனுமதி பெற்ற நிலையில், மாநாடு தேதி மாற்றப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,  தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழ்நாடு மக்களின் பேரன்புடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.  நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும், முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம். இந்நிலையில் நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம் வாகை குடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்