விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று(24-01-2024)
4 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுக்கான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தீயை அணைத்து இடுபாடுகளுக்கு இடையே சிக்கி கிடந்த நான்கு பேரையும் மீட்டனர். அவர்களில் முதலிப்பட்டியை சேர்ந்த வீரகுமார், கன்னிசேரி புதூரைச் சேர்ந்த காளிராஜ் ஆகிய இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் 90 சதவீத தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.