“நன்றாக படி”என்று சொல்லிவிட்டு உயிர்விட்ட தந்தை- கனத்த இதயத்தோடு பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவி… ( வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவெறும்பூர் அருகே அசூர் ஊராட்சிக்குட்பட்ட பொய்கைகுடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக மளிகை கடை நடத்தி வந்தவர் சண்முகம் (55). இவரது மனைவி சத்தியசுந்தரி (49). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக சண்முகம் மூச்சு திணறல் காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சு திணறல் அதிகமானதால் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் அவரது நான்காவது மகள் உடன் இருந்தார். அப்போது சண்முகத்தின் உடல்நிலை கவலைக்கிடமானது. அப்போது தனது உயிர் பிரியும் நேரத்தில் சண்முகம் தனது மகளை அழைத்து கல்விதான் உன்னை உயர்த்தும், நன்றாக படி என்று கூறியுள்ளார். சற்று நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. இதனால் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத மாணவி, மனதை தேற்றிக்கொண்டு இன்று(13-03-2025) நடந்த பிளஸ் -1 தேர்வு எழுத புறப்பட்டு சென்றார். அப்போது அவர் கூறுகையில், தந்தை இறக்கும் தருவாயிலும் என்னை நன்றாக படிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.அவரது கனவை நிறைவேற்றுவேன் என்று கூறிவிட்டு கனத்த இதயத்தோடு தேர்வு எழுத புறப்பட்டு சென்றார்.
Comments are closed.