திருச்சி பொன்மலைபட்டியில் பரபரப்பு: வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- பிரபல ரவுடியிடம் விசாரணை…!
திருச்சி, பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி என்கிற டேஞ்சர் மணி. இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவர், அருகில் உள்ள வீட்டிற்கு சென்று தனக்கு சொந்தமான மாடு காணாமல் போய் விட்டது, தங்கள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள் யாரும் இல்லை, தற்போது கண்காணிப்பு கேமராவை பார்க்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த தங்கமணி, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதோடு தான் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை வீட்டின் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் பொன்மலைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பகுதியில் பதுங்கி இருந்த தங்க மணியை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்மலை பட்டியில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.