புயல் காரணமாக தமிழகத்தில் இன்று (27-11-2024) 25 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது., தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவெடுக்கும். தமிழகத்தை நோக்கி இது நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யலாம். தற்போது, தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில், 590 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து, 710 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து, 800 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. அது தற்போது வடக்கு, வடமேற்கில் மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,27) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.