திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று ( 21.09.2023 ) மின்சாரம் நிறுத்தப்பட்டது. காலை 9- 45 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் மாலை 5 மணிக்கு வினியோகம் செய்யப்படும் என்று மின் வாரியத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 11 மணி வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது சரியான பதில் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வாத்தலை போலீசார் மற்றும் உதவி மின் பொறியாளர் ஐயப்பன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவி மின் பொறியாளர், அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மின் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இன்னும் 30 நிமிடத்தில் மின்வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.