“தி.மு.க. கூட்டணி கட்சி தலைவரின் குடும்பத்தினருக்கே பாதுகாப்பு இல்லை- இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா?- எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து வன்முறைத் தாக்குதல் நடத்தி நள்ளிரவில் அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மனைவியுமான பா. ஜான்சிராணி தாக்கப்பட்டு படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று உள்ளது. திமுக அரசு அனைத்து விதமான “கோரிக்கைக் குரல்களை” ஒடுக்க நினைக்கிறது. ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து அடிப்படை உரிமைகளை கூட மறுத்து தாக்குதல் நடத்தியுள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.