Rock Fort Times
Online News

நாடாளுமன்றத்தில் பெண் மந்திரிகளை பார்த்து ராகுல்காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தாரா?…!

21 பெண் எம்.பி.க்கள் சபாநாயகரிடம் புகார்...

நாடாளுமன்றத்தில் இன்று ( 09.08.2023 ) மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பங்கேற்று பேசும்போது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியாவின் குரலை கொன்று விட்டீர்கள், மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் என கூறினார். அவரது குற்றச்சாட்டுக்கு, மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி பதிலளித்து பேசினார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீது பா.ஜ.க.வைச் சேர்ந்த, மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் 21 பேர் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர். 21 பேரும் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை சபாநாயகரின் அலுவலகத்தில் ஷோபா கரந்த்லாஜே சமர்ப்பித்தார்.

அந்த கடிதத்தில், நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தங்களைப் பார்த்து  பறக்கும் முத்தம்  (flying kiss) கொடுத்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மக்களவையில் பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதித்தது மட்டுமல்லாமல், அவைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்திய ராகுல் காந்தியின் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் கூறி உள்ளனர். மக்களவையில் , மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது ராகுல்காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது பாஜக பெண் எம்.பி.க்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பான வீடியோ அல்லது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்