Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்த பிறகு ஜூலை 17-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் ( 26.07.2023 ) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்