டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்கும் பார்வையற்றோருக்கு பயிற்சி…
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது...
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் பங்கேற்கவுள்ள பார்வையற்றோருக்கான இலவச பயிற்சி வகுப்பு 15-ம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி பிரிவும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் (தொகுதி 4) பங்கேற்கவுள்ள பார்வையற்றோருக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. அந்தவகையில் மாவட்ட மைய நூலகம், என்.ஆர் ஐஏஎஸ் அகாடமி, ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்பு, நூலக வளாகத்தில், வருகிற 15-ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதேபோல டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வெழுதும் நபர்களுக்கான மாதிரித் தேர்வுகளும் நூலகத்தில் நடைபெறவுள்ளன. அந்தவகையில் 16ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு மாதிரித் தேர்வு நடைபெறுகிறது. மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் என மாவட்ட மைய நூலகம் அழைப்பு விடுத்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.