கிராமிய பாடல்களை பாடி புகழ் பெற்றவர் வேல்முருகன். பின்னர், தமிழ் திரைப்படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார். இவர், சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக சம்பவத்தன்று சென்றுள்ளார். வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் சந்திப்பு அருகே சென்றபோது அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு தடுப்பு போடப்பட்டு அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இதனை பொருட்படுத்தாத வேல்முருகன், பேரிகார்டை விலக்கி விட்டு அந்த வழியாக செல்ல முயன்றுள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு, இவ்வழியாக வாகனங்கள் செல்லக் கூடாது என கண்டிப்புடன் கூறினாராம். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய் தகராறாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த வேல்முருகன், வடிவேலை தாக்கி விட்டு தடையை மீறி அந்த வழியாக காரில் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த வடிவேலு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் ,இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.