திருச்சி வடுகப்பட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை…
இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் எ.வ.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடா் நடந்த வருகிறது. இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினா் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு பேசினாா். அப்போது அவா் பேசுகையில் : திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே. சாத்தனூர் வடுகப்பட்டி பகுதியில் சுமார் 2000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பஞ்சப்பூரில் முதல்வரின் ஆலோசனையின் பேரில் ரூபாய் 349 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. வடுகப்பட்டி பகுதி வளர்ந்து வரும் பகுதியாகும். திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை என்பது நகாய் அமைப்பின் கீழ் வருகிறது. இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. கே.சாத்தனூர், எல்.ஐ.சி காலனி, வடுகபட்டி மக்கள் திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். இங்கு ரவுண்டானா இல்லாததால் விபத்துக்கள் நடந்து வருகின்றன. விபத்துகளை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை மற்றும் மின்விளக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்.
இந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகாய் அமைப்பிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு அமைச்சர் பரிந்துரை செய்தால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். ஆகவே, இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், எனது தொகுதிக்கு உட்பட்ட மேல சிந்தாமணி சிதம்பரம் மஹால் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் குறுகலான பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளிக்கையில், திருச்சி புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். திருச்சி புறவழிச் சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமானது. புறவழிச்சாலை பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் முழுமை அடைந்ததும் பயன்பாட்டுக்கு வரும். போக்குவரத்து அதிகமாக உள்ள பட்சத்தில் ரவுண்டானா அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரவுண்டானா அமைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அதன்பிறகு பரிசீலித்து முடிவு செய்யப்படும். மேலும், மேல சிந்தாமணி பகுதியில் குறுகிய பாலத்திற்கு பதிலாக அகலமான பாலம் கட்ட நகராட்சி மேலாண்மை திட்ட அறிக்கை தயாரித்து அடுத்த நிதியாண்டில் இந்த பணி சேர்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.