Rock Fort Times
Online News

வங்கதேச எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராணுவத்தினரால் கைது…!

திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் ஜான் செல்வராஜ். 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காவல் துறையில் வாகன ஓட்டுனராக பணியாற்றினார். பின்னர் 2009 முதல் 2019ம் ஆண்டு வரை பணியில் இருந்து ஒதுங்கி இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் காவல் துறையில் சேர்ந்த ஜான் செல்வராஜ் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். தாம்பரம் சரகத்தில் அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் காவல் நிலையங்களில் சேலையூர் காவல் நிலையமும் ஒன்று என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜான் செல்வராஜ் ஏதேனும் காரணங்களை சொல்லி அடிக்கடி விடுப்பு எடுப்பதையே வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மருத்துவ விடுப்பில் 60 நாட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உயர் அதிகாரி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஜான் செல்வராஜ் கடந்த 19ம் தேதி விடுப்பு எடுத்துக்கொண்டு வங்காளதேசம் சென்றுள்ளார். விடுப்பு முடிந்த பிறகும் அவர் பணிக்கு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார்? , என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் வங்கதேச எல்லையில் ஜான் செல்வராஜை அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரிடம் தமிழக காவல் துறையின் அடையாள அட்டை இருந்ததைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக மாநில காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான் செல்வராஜுக்கு குற்றவாளிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் மூலம் அவர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வங்கதேசம் சென்ற இடத்தில் அவர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்