தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜுன் 3-ம் தினத்தன்று ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கெளரவிக்க ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 2022-ம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக இவ்வாண்டு மட்டும் ஒரு பெண் இதழியலாளருக்கு கூடுதலாக ஒரு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கௌரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதானது, ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராக இருக்க வேண்டும். பத்திரிகை பணியை முழுநேர பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. ”கலைஞர் எழுதுகோல் விருது 2022” மற்றும் பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ஆகியவற்றிற்கான தகுதியான விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 31.7.2023 க்குள்ளாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.