மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்ட அமலாக்க நிறுவனமான ஜி.எஸ்.டி. கோவை மண்டல நுண்ணறிவு இயக்குனரகத்தின் திருச்சி மண்டல பிரிவு அதிகாரிகள் திருச்சியில் குறிப்பிட்ட சில வணிக வளாகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, எந்தவித வியாபாரமும் இல்லாமல் போலியாக விலைப்பட்டியல்கள் தயாரித்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வரி ஏய்ப்பின் முக்கிய நபரான ஒரு பட்டய கணக்காளரின் அலுவலகத்தில் எவ்வித வியாபாரமும் இல்லாமல் பல போலியான நிறுவனங்களின் பெயர்களில் விலைப்பட்டியல்கள் தயாரித்து பல கணினி மற்றும் இதர ஆதாரங்களின் மூலம் ரூ.83 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. மேலும், திருப்பூரில் போலி நிறுவனங்கள் ஆரம்பித்து அதன் மூலம் எவ்வித வியாபாரமும் இல்லாமல் போலியாக விலைப்பட்டியல்கள் தயாரித்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த நபர்களும் மற்றும் அந்த பட்டய கணக்காளரும் வரிஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த வரி ஏய்ப்பு செயல்களால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்த பட்டைய கணக்காளர் ஒப்புக்கொண்டார். விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் திருச்சி மண்டல பிரிவு அதிகாரிகளால் அந்த பட்டய கணக்காளர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.