இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டும் இன்று ( 29.06.2023 ) பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடந்தது.

இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா , திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் ஃபைஸ், மாவட்ட செயலாளர் அசுரப் அலி, மாவட்ட பொருளாளர் காஜா மியான், மாநில அமைப்பு செயலாளர் மிட்டாய்காதர் ,மாநில செயலாளர் ரபீக் உள்பட திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். பெண்கள் தொழுகை நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் தொழுகை செய்தனர். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.