Rock Fort Times
Online News

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 16, 17-ந் தேதிகளில் திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்…!

திருச்சி மாநகரில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீக்தாயள் தெரிவித்திருப்பதாவது ; திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் செப்.16ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் செப்.17ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, வலதுபுறமாக அம்மா மண்டபம் வழியாகச் சென்று ஸ்ரீரங்கம் பெரிய கோபுரம், திருவானைக்காவல் வழியாக, மீண்டும் தங்களது வழித்தடத்தில் செல்ல வேண்டிய ஊர்களுக்கு இயக்க வேண்டும்.

துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து புறநகர் பேருந்துகளும் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை டிவிஎஸ் டோல்கேட் சென்று, பழைய மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைய வேண்டும். அங்கிருந்து மீண்டும் தங்களது வழித்தடத்தில் இயக்க வேண்டும். அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ்சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலையில் இருந்து அண்ணாசிலை வழியாகவும் எந்தவிதமான வாகன போக்குவரத்திற்கும் அனுமதியில்லை. திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் தேவைப்பட்டால் மாலை 6 மணிக்கு மேல் டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால்நிலையம் வழியாக மத்திய பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும். பஞ்சப்பூர் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பாலக்கரை வழியாக செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் மாலை 6 மணிக்குமேல் தலைமை தபால் நிலையம், பாலக்கரை, வழியாக செல்லக்கூடாது அதற்கு பதிலாக எம்ஜிஆர் சிலை, நீதிமன்ற சாலை, சாஸ்திரி சாலை மார்க்கமாக செல்ல வேண்டும்.

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க வரும் வழித்தடங்கள்:

பெரம்பலூர், அரியலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி சாலைகளின் வழியாக வரும் விநாயகர் சிலைகள் நெ.1 டோல்கேட் – திருவானைக்காவல் , மாம்பழச்சாலை வழியாக காவிரியாற்றின் இடதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும். திருவெறும்பூர் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் பாலக்கரை, காந்தி மார்க்கெட் ஆர்ச், பெரியகடை வீதி அண்ணாசிலை வழியாக காவேரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்ல வேண்டும். புதுக்கோட்டை சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் டி.வி.எஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பிரபாத், அஞ்சுமன் பஜார் (காயிதே மில்லத் சாலை) – காந்தி மார்க்கெட் ஆர்ச் பெரியகடைவீதி- அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும். திண்டுக்கல் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் பொன்நகர் , பெரியமிளகு பாறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வெஸ்ட்ரி ரவுண்டானா எம்ஜிஆர் சிலை, நீதிமன்ற சாலை, சாஸ்திரி ரோடு, கரூர் புறவழிச் சாலை, அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுறம் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு செல்ல வேண்டும். வயலூர் சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் புத்தூர் 4 ரோடு, சவுத் ஆர்ச், நார்த் ஆர்ச், கரூர் புறவழிச்சாலை, அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுறம் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும். குழுமணி சாலை வழியாக வரும் விநாயகர் சிலைகள் வெக்காளியம்மன் நகர், சாலைரோடு, நார்த் ஆர்ச், கரூர் புறவழிச்சாலை, அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்தின் வலதுபுறம் சிலைகளை கரைத்துவிட்டு செல்லவேண்டும். மேலும் விநாயகர் ஊர்வலம் 16ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினத்தில், சரக்கு வாகனங்களுக்கு மாநகருக்குள் அனுமதி இல்லை. ஃட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதீக்தாயள் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்