மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு…* டெல்டா விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க அறிவுறுத்தல்..!
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் போதிய அளவில் கிடைக்காததால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக திறக்கப்படும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில்
கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (ஆகஸ்ட் 28) தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல்வர் விஜய் தண்ணீரை திறந்து வைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது. இதனையொட்டி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும், திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடி பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், ‘ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்’ கிடைப்பதையும் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.